Sunday, February 11, 2007

இறுதிப்பயணம்

பயணநாள் நெருங்க நெருங்க
பதட்டம் அதிகமாகியது

மூட்டை முடிச்சுக்கள்
மூன்று வண்டிகளில்
முடிந்த மட்டும் எடுத்துக்கொண்டேன்

உடுத்திக் கொள்ள விதவிதமான உடைகள்
உண்ண வகைவகையாய் உணவு வகைகள்
படிக்கப் புத்தகங்கள்
படுக்க மெத்தைகளோடு
செலவளிக்கப் பணம்

சிறுகச்சேர்த்த தங்கம் வெள்ளியோடு
வாழ்நாள் சேமிப்புக்களையெல்லாம்
வாரிச்சுருட்டிக் கொண்டேன்
பல கட்டங்களில்
பயணச்சோதனைகள்

முதல் சோதனையில்
உணவுக்குத்தடை

இரண்டாம் சோதனையில்
உடைகளுக்கும் தடை

மூன்றாம் சோதனையில்
குண்டுமணியளவு தங்கமும்
கொண்டுசெல்லக்கூடாதாம்
வெள்ளியோடு
வெள்ளிப் பணத்தையும்
விட்டு விட ஆணை

முடிவில்
முழுவதும் விட்டுவிட்டு
ஆடைகளும் களைந்துவிட்டு
ஆள் மட்டும் காத்திருந்தேன்

இறுதிச்சோதனையில்
உடம்பையும் தவிர்த்து
ஆவிக்குமட்டுமே
கிடைத்தது
அனுமதி!

பாவிநான் நினைத்தேன்..
கோடிசேர்த்தும்
கொண்டு செல்வதொன்றுமிலையே!

ஓடிச்சேர்த்ததெல்லாம்
ஒட்டாமல் போனதென்றேன்
கூட்டிச்சேர்த்ததெல்லாம்
கூடவரவில்லையென்றேன்
வேதனை மிகுந்ததென்றேன்
வேறென்ன கூடவருமென்றேன்?
நீசெய்த தருமங்கள்
நிச்சயம் வருமென்றார்!

நான் என்ன செய்தேன்?
நான் என்ன செய்வேன்?

குறிப்பு: இன்று (11-feb-2007) சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்துள்ளது.

Labels:

3 Comments:

At 2:46 PM, Blogger SP.VR. SUBBIAH said...

இதை பட்டிணத்தார், ஒரே வரியில் சொன்னார்
'காதறுந்த ஊசியும் வராது காண் கடைவழிக்கே!

 
At 3:13 PM, Blogger Unknown said...

இதை இறுதிப் பயணம் என்று சொல்லலாமா? இல்லை வாழ்க்கைப் பயணத்தின் முடிவு என்று சொல்வதா?

கவிதை நன்று!!!

 
At 12:42 AM, Blogger Deiva said...

Good Poem.

 

Post a Comment

<< Home