Sunday, July 27, 2008

கதவுகள் (ஒலி 96.8ல் கவிதைநேரத்தில் வாசிக்கப்பட்டது - (26-ஜுலை-08 10::00 pm))

சிலர் திறக்கிறார்கள்
சிலர் மூடுகிறார்கள்
நானும் திறக்கிறேன்
கதவு திறக்கையில்
ஒரு புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டுவதைப் போல
அதிலுள்ள சொற்கள்
உள்நுழைவதைப் போல
காற்றும் வெளிச்சமும்
உள்நுழைகின்றன
இறுக்கமும் இருளும்
வெளியேறுகின்றன
சில கதவுகள்
ஒரு திரைச்சீலையை
விலக்குவதைப் போல
திறக்க எளிதாக இருக்கின்றன
‘க்ரீச்’
சில கதவுகள்
கடினமாகத் திறக்கும்போது
சப்தமிடுகின்றன
கதவுகளுக்கான சாவிகள்
எவர் எவரிடமோ?
நான் தான் அவற்றைத்
தேடிப் போக வேண்டியிருக்கிறது
திறக்கத் திறக்க ஓயவில்லை
ஏன் இத்தனை கதவுகள் என்வீட்டில்?
நிறையத் திறந்து மகிழ்ந்து
கண்ணயர்ந்த போது
கனவு வருகிறது
கனவில் ஒரு வான்வீடு
எங்கும் வெளிச்ச வெள்ளம்
அங்கு ‘என்னுடையது’, ‘உன்னுடையது‘
என்று ஒன்றும் இல்லை
அங்கு எல்லாம் எல்லார்க்கும் எப்போதும்
மேகங்களில் தாவிக் குதிக்கிறேன்
வானவில்லின் வளைவுகளில் சறுக்கி விளையாடுகிறேன்
கண்விழித்துக் கேட்கிறேன்
‘இதுபோல் கதவுகள் இல்லா வீடு வேண்டும் எனக்கு’
சாத்தியமா?
இன்னொருவன் எச்சரிக்கிறான்
‘நட்சத்திரங்கள் இருக்காதே’ என்று
எனக்குச் சொல்லத் தோன்றுகிறது
‘சூரியன் இருக்கிறதே என்று’

Labels:

1 Comments:

At 5:59 PM, Blogger Learn Speaking English said...

மிக நல்ல பிளாக்

 

Post a Comment

<< Home