Sunday, September 02, 2007

நாளைய மனிதச்சிற்பிகள் (ஆசிரியர் தினக் கவிதை)

மாதா பிதா குரு தெய்வம்
குரு தெய்வம் என்று குறைந்து போச்சு!

முதல் இரு இடங்கள் என்ன ஆச்சு?
முனைப்போடு பொருள் தேட முன்னேறியாச்சு!
காகிதப் பொறுக்கலே காரணமாச்சு!
பிள்ளைகள் நிலை என்ன ஆச்சு?
அம்மா முகம் பாத்து ஆறு நாளாச்சு!
அப்பா முகமோ மறந்தே போச்சு!
தாத்தா பாட்டி தவிர்த்து நாளாச்சு!
பணிப்பெண் முகமே பழகிப்போச்சு!
அறைகளும் சிறைகளாய் ஆகிப்போச்சு!
அன்புக்கு ஏங்கிடும் அவல நிலையாச்சு! - அதனால்
ஆசிரியப்பணி இப்போ அதிகமாச்சு!

அறிவைப் போதிக்கும் போதிமரங்களே!
இளையர்கள், வளையும் பாறைகள்! - சிலைவடித்திடுங்கள்!
இயந்திரங்கள் வேண்டாம்
இதயமுள்ள மனிதர்கள் வேண்டும்!
நடைப்பிணங்கள் வேண்டாம்
நகைச்சுவை மனிதர்கள் வேண்டும்!

தொட்டுவிடும் தூரத்தில்
துரத்தும் பாம்புகளாய்,
வீடியோ வில்லன்,
போதைப்புதைகுழி,
இணையக் கழுகு
இன்னபிற இன்னல்கள்

தப்பிக்க, உங்களின் உளிகளால்தான்
அவர்களின் இதயங்களில்
அழுந்த எழுத முடியும்! - எழுதுங்கள்!

கூடுதல் பொறுப்போடு
கூடுதல் பணியாற்றும்
நாளைய மனிதச்சிற்பிகளே
உங்களை இந்நாளில்
கூடுதலாய்த் தலைவணங்கி
வாழ்த்தி மகிழ்கிறோம்!

குறிப்பு: சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல் 01-செப்டம்பர்-2007 ஆசிரியர் தினத்தன்று வாசித்தது.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home