Sunday, November 04, 2007

நவீனப்பறவை - கவிதை

அனுபவங்கள்
மனதின் அடிஆழத்தில்
கூடுகட்டி முட்டையிட்டன!

செந்தமிழால்
சேர்த்தணைத்து அடைகாத்து
கதகதப்பூட்டினேன்!

நெஞ்சுடைத்துக்
குஞ்சு பொரித்தன
‘உண்மைகள்!’

படிமச்சிறகுகள்
படிப்படியாய் முளைத்தன!

குறியீட்டுத் தலைதூக்கி
சிறகு விரித்து எனை
விட்டுப்பிரிந்து
எட்டிப் பறந்தது
நவீனப் பறவை!

‘பருந்து’ என்றான் ஒருவன்!
‘பச்சைக்கிளி’ என்றான் இன்னொருவன்!
கொஞ்சினான்
கொட்டைகளை உண்ணக்கொடுத்தான்

உணவெடுத்த பறவை
எழுந்து பறந்தது
எச்சமிட்டுக்கொண்டே

எச்சக் கொட்டைகள்
குளத்தில் அலைகளாகலாம்!
மண்ணில் விதைகளாகலாம்!
விதைகள் விருட்சங்களாகலாம்!

Labels: