Monday, August 09, 2010

உயர்வைத் தந்த சிங்கப்பூர்

ஊரில் இருந்து
உழைக்க வந்த
வந்தேறி தான்நான்

உயர்வைத் தந்த
சிங்கப் பூரை
நினைத்துப் பார்க்கிறேன்

பாதை தோறும்
இவள் உயர்வைப்
பார்த்து மகிழ்கிறேன்

அடுக்கு மாடி
வீடு கட்டி
அழகு பார்க்கிறாள்

வீட்டின் மேலே
தோட்டம் போட்டு
விண்ணைத் தொடுகிறாள்

மண்ணைத் தோண்டி
சுரங்கம் வைத்து
இரயில்கள் விடுகிறாள்

அழகு மலர்களாகத்
தீவு முழுதும்
மலர்ந்து மணக்கிறாள்

கூட்டிக் கழித்துக்
கணக்குப் பார்த்துக்
கொள்கை வகுக்கிறாள்

அடுத்து அடுத்துச்
செய்யும் பணி
திட்ட மிடுகிறாள்

துறைகள் தோறும்
தொடர்ந்து மாற்றம்
செய்து பார்க்கிறாள்

உழைத்து உயர்ந்தும்
போதும் என்று
ஓய மறுக்கிறாள்

அழைத்துச் சென்று
அகிலம் முழுக்கக்
காட்டிச் சொல்கிறேன்

இவளைப் போல
அவர்கள் மாற
இதனைச் செய்கிறேன்

அழகுத் தீவை
நினைத்துப் பார்த்து
புல் அரிக்கிறேன்

ஆசை தீரத்
தழுவிக் கொள்ள
ஆசைப் படுகிறேன்

அடுத்த நாளே
அவள் மகனாய்
ஆகிப் போகிறேன்!

Labels: