Sunday, April 20, 2008

ஆரஞ்சுப்பழம் (கவிதை)

நான் இன்னும்
குப்பைத் தொட்டிக்குள்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அந்த அகப்படாத பழத்திற்காக!
*
தோண்டி எடுத்து
அழுக்குப்போகக் கழுவி
கடினமாயிருக்கும்
அதன் மேல்தோல் அகற்றி
நரம்புகளோடிய வெண்தோல்
உரிக்க வேண்டும்
*
பின் மெல்ல
சேதமின்றி
சுளைகளைப் பிரித்து
கொட்டைகளை நீக்கி
உள்ளிருக்கும்
நீர் நாத்துக்களைத் திரட்டி
ரசம் எடுக்க வேண்டும்!
*
ரசம் தாகம் தீர்க்கும்!

*
நான் இன்னும்
வாழ்ந்து தீரவேண்டியிருப்பதால்
குப்பைகள் மேலும்
சேர்ந்து கொண்டே
இருக்கின்றன!
*
தொடர் தேடலில்
நம்பிக்கை அற்றுப்போகாமல் நான்!

குறிப்பு: இன்றைய (20-ஏப்ரல்-2008) சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் வெளிவந்துள்ளது இக்கவிதை.

Labels: