Friday, March 30, 2007

அதிகப்பணம் அதிக மகிழ்ச்சியா?

அதிகப்பணம் அதிக மகிழ்ச்சியா?

ஏழைக்குப் பணம் மகிழ்ச்சிதான். அதில் சந்தேகமில்லை. தன்னிறைவுக்கு மேலே அதிகப்பணவரவு மகிழ்ச்சியா? என்பதுதான் இங்கே கேள்வி.

உடனே தன்னிறைவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கணம் வைத்துக்கொண்டு எனக்கு பத்து காரும் பத்து பங்களாவும் வந்தால்தான் தன்னிறைவு எனக்கொள்ளக்கூடாது. ஒருவர் உயிர்வாழ குறைந்தபட்ச தேவைகள், அடிப்படை வசதிகள் இவற்றைத் தன்னிறைவு எனக்கொள்ளலாம்.

அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. ஒருவர் கையில் ஏதுமில்லாது வழிநடைப்பயணம் போனார். இடையிடையே தங்கி ஓய்வெடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். பயணம் நிம்மதியாக அமைந்து வந்தது. வழியில் அவருக்கு விலையுயர்ந்த வைரக்கல் ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அன்று இரவு முதல் அவருக்குத் தூக்கம் போனது. அவருடைய எண்ணம் அந்த வைரக்கல்லைப் பாதுகாப்பதைப் பற்றியே இருந்தது. இப்படித்தான் நம் வாழ்க்கைப் பயணமும்.

நாம் நம் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளைக் கணக்கிடுவதாக வைத்துக்கொள்வோம். எதையெல்லாம் கணக்கிடுவோம்? கார், பங்களா, வீடு, நிலம், தோட்டம், நகைகள், வங்கியில் சேமிப்பு எவ்வளவு? இப்படித்தானே? பதிலாக நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், செய்துள்ள தர்ம காரியங்கள், பொதுநலப்பணிகள் என்னென்ன என்று கணக்கு எடுத்திருப்போமா?

நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பாய்ச்சல் குறையும், மகிழ்ச்சிக்கான மற்ற தேடல்களில் மனத்தைச் செலுத்த முடியும். ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது. காலில் வெண்ணீரை ஊற்றிக்கொண்டதைப்போல வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. பொருள் மீது பற்றுக்கொண்டு ஓடுகிற ஓட்டத்தில் திரவியத்தேடலில் நாமே வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நாமும் தொலைந்து போகிறோம்.

தேடும் போதே அனுபவிப்பதும், அனுபவிக்கும் போதே தேடுவதும் வாழ்க்கையில் சாத்தியப்படுத்திக் கொள்ளமுடியுமா? வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நிகழ்காலத்தை வாழச் சொல்லுகிறார்க்ள் உளவியலாளர்கள்.
நாம் அப்படியா வாழ்கிறோம்? பெரும்பாலும் இறந்த காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்கியிருப்போம். அல்லது வருங்காலத்தைப் பற்றிப் பயந்து கொண்டு இருப்போம். அல்லது இரண்டுமற்ற ஒரு சூழலில் சிக்கியிருப்போம்.

பணம் என்ற உப்புத்தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சிதரும் விசயங்களான உறவுகள், நண்பர்கள், கலை, பொதுப்பணி, சமூகச்சிந்தனை, புத்தகம், இலக்கியம், மொழி, கலாச்சாரம், இசை இவற்றோடு நம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழகவேண்டும். அதற்காக பொருள் தேடலை முற்றிலுமாக நிறுத்தி விடவேண்டும் என்பதல்ல கருத்து. முக்கிய நோக்கம் அதுவாக இருப்பதுதான் தவறு. ஓட்டத்தை நிறுத்தாமல் சீராக ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த ஓட்டம்தான் உழைப்பு. உழைப்பின் பயன் பணம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியமும்தான். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமும் முக்கியம்தானே? மன ஆரோக்கியத்துக்குத்தான் மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்.
ஒவ்வொரு நாளும் பிறக்கிறபோது “இந்த நாள் எனக்காகப் பிறந்திருக்கிறது” என்ற நினைவோடு அந்த நாளை அனுபவித்து வாழ்வோம். அப்படியே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிப்பூக்களை அள்ளித்தூவட்டும் நம்மீது.

Labels:

Sunday, March 25, 2007

யதார்த்தத்திலிருந்து விலகி. . .

வெகுஜன ஊடகங்களான தொலைக்காட்சியும் சினிமாவும் வாழ்க்கையின் பெரும் பகுதியை அடைகாக்க ஆரம்பித்துவிட்ட இன்றைய நிலையில் அவை பற்றிய ஆராய்ச்சி அவசிமென்றே படுகிறது. படைப்பாளிகளுக்கு அவர்களின் பொறுப்பை, அவர்களே அறியாத அவர்களின் பலத்தை உணர்த்த வேண்டியதன் அவசியம் உண்டாகிறது.

எங்கிருந்து எங்கு வரை, எந்த வட்டத்தை ஆராய்வது? ‘உலக சினிமா’ என்பது பெரிய வட்டம், அதனை உள்வாங்கும் சமூகங்களும் அவற்றின் வேறுபட்ட பார்வைகளும் பலவாறாய் விரிகிற படியால் அதனை விடுத்து இன்னும் சற்று சிறிய வட்டமான ‘இந்திய சினிமா’ சரியாய் வருமா? ‘இந்திய சினிமா’ வையும் அது தாக்கம் ஏற்படுத்தும் சமூகங்களையும் அதிக வெறுபாடுகளின்றிப் பொதுமைப்படுத்தி விடமுடியும் என்பதால் அதனையே ஆராய்ச்சிக்களமாக்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

படைப்பாளிக்கென்று ஒரு சமூகப்பார்வை இருக்கும். சமூக அக்கறை இருக்கும். இவை மட்டுமல்லாமல் இன்னபிற காரணங்களான ‘நடைமுறை’, ‘வியாபார நோக்கம்’, ‘தயாரிப்பாளரின் விறுப்பு வெறுப்பு’ எல்லாமாய்த்தான் படைப்பு படைக்கப்பட்டு வெளிவருகிறது. பல காரணங்கள் இருந்தாலும் படைப்பாளியின் பார்வைதான் 75 சதவிகிதம் படைப்பாக மாறுகிறது. ஆகவே படைப்பாளியின் அனுபவத்தையும், பக்குவத்தையும், ஒழுக்கநெறிகளைப் பொறுத்தும் அவன் பார்வை வேறுபடுகிறது.
படைப்பாளியின் வயதும் முக்கியமாகிறது. இளைய படைப்பாளிகள் அதிகமாய்த்தருவது காதல் பற்றிய படைப்புக்களைத்தானே?

நாட்டுநடப்பைத் தான் படைப்புக்களாக்குகிறோம் என்று படைப்பாளிகள் சொல்லுகிறார்கள். படைப்புக்களைப் பார்த்துத்தான் நாங்கள் இப்படிச்செய்தோம் என்று சமூகத்தினர் சொல்லுகிறார்கள். இது கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்பது போல இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் சிறுவனைக் கடத்திக் கொன்ற மூன்று இளையர்கள் தாங்கள் பார்த்த சினிமாவே தங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது என்றார்கள். யார் முந்தி என்பதை விட சமூக அக்கரை, அது மேன்மை அடைய வேண்டும் என்கிற பிரஞ்யையோடு படைப்பாளிகள் செயல் பட்டார்களே ஆனால் அது நல்ல மாற்றமாக அமையும்.

இன்றைய சினிமாப் படைப்புக்களில் வன்முறைக் காட்சிகள் அளவுக்கு அதிகமாகி விட்டன. வன்முறையைக் காட்டுவதிலே புதுப்புது உத்திகள் வேறு. தணிக்கையாளர்கள்
இன்னமும் ‘தர்மம் அதர்மத்தை அழித்து இறுதியில் வெல்லும்’ இந்த இலக்கணத்தை மீறாமல் படைப்புக்கள் இருந்தால் சரி என்கிற ரீதியிலேயே இருந்து கொண்டு வன்முறை உச்சம் தொடும் வரை சும்மா இருப்பது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை. வன்முறைக்கு அளவுகோல் வைத்துக்கொண்டு தடுத்தால் தரமான படங்கள் கிடைக்கும். அவற்றால் பயன் விழையும்.

ஈகோதான் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று உளவியலாளர்கள் ஆண்டாண்டு காலமாய்க் கூறிவருகிறார்கள். எந்தக் கதாநாயகன் ‘ஈகோ’ இல்லாதவனாகச் சித்தரிக்கப்படுகிறான்? ‘நான் யார் தெரியுமா?’, ‘நான் பறந்து அடித்தால் என்னாகும் தெரியுமா...’ என்று பஞ்ச் வசனங்கள் இல்லாத படங்கள் மிகக்குறைவே. இப்படங்களைப் பார்க்கிற சமூகத்தில் ஈகோதான் பிரதானமாய் வளர்ந்து எங்கும் வியாபிக்கிறது. அதனால் பிரச்சினைகளும் வளர்கின்றன.

ஒரு கதாநாயகன் பத்துப்பேரை அடிப்பதும், அவனுக்கு எந்தக் காயமுமே படாமல் இருப்பதும் சாத்தியமா? யதார்த்தத்திற்கும் இதற்கும் எவ்வளவு இடைவெளி என எண்ணிப்பாருங்கள். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் காதில் பூச்சுற்றிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அப்பாவிச் சமூகமும் இன்னும் எவ்வளவு காலம்தான் அதற்கு இரையாகிக் கொண்டிருக்குமோ தெரியவில்லை.

புதிய புதிய கதைக் களங்களும், புதிய சமூக மேம்பாட்டுச் சிந்தனை கொண்ட படங்களும் சமூகத்துக்குத் தேவை. அந்த முயற்சிகள் ஏன் எடுக்கப்படுவதில்லை.
‘இதுதான் எடுபடும்’ என்கிற தவறான கண்ணோட்டம் காரணமாக இருக்கலாம். படைப்பாளிகளின் அனுபவமின்மை காரணமாக இருக்கலாம். படைப்பாளிகளின் வயது காரணமாக இருக்கலாம். தயாரிப்பாளரின் குறுக்கீடு காரணமாக இருக்கலாம்.

படைப்புலகில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். தணிக்கையாளர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப தணிக்கை அளவுகோல்களை (சமூக மேம்பாட்டுக்கு உதவும் வகையில்) மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் படைப்பாளிகளின் சுதந்திரச் செயல்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் காதலையும், வில்லனையும், ஈகோக் கதாநாயகனையும் காட்டிக்கொண்டிராமல் வெறு பல விசயங்களையும் சிந்திக்க வேண்டும். படங்கள் யதார்த்தத்திலிருந்து விலகாமல் உண்மை பேசினாலே தரம் கூடும். அப்படி ஒரு மறுமலர்ச்சி ஏற்படக் காத்திருப்போம்.

Labels:

Tuesday, March 13, 2007

முரண்பாடு

‘நீதான் என் உயிர்’ நேற்று
‘என் உயிரை வாங்காதே’ இன்று

சந்திக்கத் தவங்கிடந்தனர் நேற்று
சந்தி சிரிக்கின்றனர் இன்று

நிலை மறந்தனர் நேற்று
நிலை மாறினர் இன்று

குற்றமாயினும் குற்றமில்லை நேற்று
குற்றமற்றதும் குற்றமானது இன்று

விட்டுக்கொடுத்தனர் நேற்று
விவாதம் புரிந்தனர் இன்று

தேன்மொழிந்தனர் நேற்று
திட்டிக்கொண்டனர் இன்று

ஏன்?

நேற்று காதலர்கள்
இன்று தம்பதியர்

Labels:

Sunday, March 11, 2007

அத்துமீறல்

அன்மைய வெடிப்பில்
அப்பாவிகளின் வாழ்க்கைக்குள்
வன்மம் அத்துமீறியது!
காரணமின்றி
இடிபாடுகளுக்குள்
சிக்கிய வாழ்க்கை
இயக்கமற்று
மீளா மயக்கத்தில்!

Labels:

Saturday, March 10, 2007

கிழிக்கப்படுகிறது வாழ்க்கை

நாட்காட்டித் தாள்களோடு
நாளும் கிழிக்கப்படுகிறது வாழ்க்கை
இல்லாத ஒன்றுக்கான
தொடர் தேடல்களோடு
சூழ்ச்சிச் சக்கரங்களைச்
சுழற்றிக்கொண்டு
கன்னியம் குறைந்த
கால் வாரல்களோடு
மாய மானை நோக்கிய
அம்பெய்தல்களோடு
கூடிய சுயநலப் பிரக்ஞையோடு
இளைப்பாறளற்ற ஓட்டமாக
ஒத்திகையில்லா நாடகமாக
முன்னிலும் வேகமாக
நகர்கிறது வாழ்க்கை!!

Labels:

“நான்” தோற்க வேண்டும்

பூக்கப்போகும்
புதிய ரோஜாக்களுக்காக
உயிர்களைப் பதியம் போட
உடன்பாடில்லை எனக்கு!

கனத்த உறுப்புக்களைக்
கழற்றி எறிந்து விட்டு
இலேசான இதயத்தோடு வா
பேச்சுவார்த்தை நடத்தலாம்!

புகைப்படத்துக்காகவும்
தொலைக்காட்சிக்காகவும்
இல்லாமல்
உனக்காகவும்
எனக்காகவும்
நம்மவர்களுக்காகவும்
புன்சிரித்து கைகளைக்
குலுக்கிக் கொள்ளலாம் வா!

வென்றது போதும்
கொன்றதும் போதும்
தோற்க வேண்டும் “நான்”!
தோன்ற வேண்டும் “நட்பு”!

வீதிகள் தோறும்
வெண்புறாக்களைப்
பறக்க விடுவோம் வா!

ஊற்றுக்கண் திறந்து
பீய்ச்சி அடிக்கட்டும்
அன்பெனும் ஊற்று!

உயிர்கள் யாவும்
அள்ளிக் குடித்து
ஆற்றிக் கொள்ளட்டும்
சுதந்திர தாகம்!

உன் அம்புகளுக்காக
என் நெஞ்சு
சட்டையைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாக
நின்று கொண்டிருக்கிறது!
குறி பார்த்து எறி
அம்புகளையும்
அன்புகளையும்!

Labels: