Thursday, October 22, 2009

நான் காடுகளையே விரும்புகிறேன்

எனக்குக்
கரிஉமிழும்
நகரங்கள்
பிடிப்பதில்லை
நகரங்களில்
பாதைகள் இருக்கின்றன!
எந்தப்பாதை
எங்கே செல்கிறதென்று
எழுதி வைத்திருக்கிறார்கள்!

காடுகளில்
நாம்தான்
கால்நடையாக
வளைந்தும்
நெளிந்தும்
ஊர்ந்தும்
ஏறியும்
இறங்கியும்
வழி கண்டுபிடிக்க வேண்டும்!
அது இன்பந்தரும்!

நான் காடுகளையே விரும்புகிறேன்
ஏனென்றால்
இலக்கைவிட
பயணம் முக்கியம்
எனக்கு!

‘கொஞ்சம் நில்!
நானும் வந்துவிடுகிறேன்
என்று
நீங்களும் சொல்வீர்கள் சீக்கிரம்!

ஏனென்றால்
இலக்கைவிட
பயணம் முக்கியம்... உங்களுக்கும்!

Labels: , ,

Sunday, October 18, 2009

புத்தாடைகள் என்ன செய்யும்?

இது ஆயத்த ஆடைகளின் காலம்.

துணியெடுத்து
வெட்டித் தைக்கும் வரை
காத்திருப்பதில்லை
அவசர வாழ்க்கை!

புத்தாடைகள்
எல்லோருக்கும்
அமைந்து விடுவதில்லை!

கொஞ்சம்
பெரிதாகவோ
சற்று உடம்பை
பிடித்துக்கொண்டோ
அமைந்து போனாலும்

ஒரு சிலர்
ஒன்றும் சொல்லாமல்
கிழியும் வரையும்
உடுத்தி விடுகிறோம்!

இன்னும் சிலர்
ஒருமுறை மட்டும்
உடுத்திவிட்டுப் பின்
உதறி விடுகிறோம்!

சிலர் ஆடைகளையும்
சிலர் தங்களையும்
மாற்றிக்கொள்கிறார்கள்!

ஆடைகளைக் கைகாட்டும்
நாம்தான் தெரிவு செய்தோம்!

புத்தாடைகள்
பொருந்தாமற்
போவதற்கு
பாவம்
ஆடைகள் என்ன செய்யும்? - இல்லை
கண்ணாடிகள்தான் என்ன செய்யும்?!

குறிப்பு: நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு போட ஆசை. குறியீட்டுக்கவிதை இங்கு பதிவாகிறது. உங்கள் கருத்தைச் சொல்லி உற்சாகமூட்டுங்கள், தொடர்ந்து நிறையப்பதிவுகள் போடலாம். வலை உலகத்திலே வலம் வரலாம். நன்றி - அன்புடன் வயிரவன்

Labels: , ,