Sunday, March 02, 2008

பசியின் பதிவுகள் (கவிதை)



வரவேற்பறை
அலங்கரிப்புக்கு
வண்ண வண்ண
ஓவியங்களுக்குப்பதில்
*
சோமாலியாக் குழந்தைகளின்
கண்களில்
நிரம்பித் ததும்பும்
சோகங்களை

*
எண்ணிவிடுகிற
நெஞ்செலும்புகளை
அவற்றுக்குக்கீழே
குழிந்து போன
வயிறுகளை

*
உயிரின் வாதைகளை
பசியின் பதிவுகளை
பத்திரிக்கை நறுக்குகளை

செவ்வகச்சட்டங்களில் ஏற்றி
சுவற்றில் மாட்டினால் என்ன
எனத்தோன்றுகிறது

*
அவை
என்றேனும் ஒருநாள்
நெஞ்சில் ஆணியறைந்து
நினைவைக் குடைந்து
இதயத்திலிருந்து
வற்றிப்போகாத
ஈரக்கசிவை
ஏற்படுத்தக்கூடும்

குறிப்பு: இந்தக் கவிதை இன்று தமிழ்முரசு இதழில் (2-Mar-2008) வெளிவந்துள்ளது.

Labels: