Saturday, December 20, 2008

காப்புறுதிக்கும் காப்புறுதி

நாங்க,
திரவியம் தேடப்
போன கதை,
தேடிய திரவியம்
போன கதை
தெரியச் சொல்றேன்
கேழுங்கையா!

பிள்ளைகள் மறந்து
பெற்றோர் துறந்து
பெருசாய் ஒழைச்சோம்
பணத்தைச் செய்ய!

வீட்டை மறந்து
ஒழைச்ச தெல்லாம்
வீணாய்ப் போச்சே
என்ன செய்ய?

சிறுகச் சிறுகச்
சேத்த பணம்
பெருகக் கண்டது
பேதை மனம் - அதப்
பெருக்க நெனச்சது
தப்பு இல்ல! - இப்பப்
பெருவாறாய்
இழந்து நிக்கிது
என்ன செய்ய?

சீட்டுக் கம்பெனியில்
போட்டு வைத்தால்
சீக்கிரம் பணமும்
பெருகுமென்றார்! - அவர்
போட்ட பணத்தைச்
சுருட்டிக் கொண்டு
ஓட்டமெடுத்த
கதையறிவீர்!

பங்குச் சந்தையில்
போட்டுவைத்தால்
பத்தாய் நூறாய்ப்
பெருகுமென்றார்!
பங்குச்சந்தைகள்
விழுந்து போச்சு!
பாதிப்பு ரொம்பத்தான்
ஆயிப்போச்சு!

நிலையில்லா வாழ்க்கையிலே
நிம்மதியாய் இருப்பதற்கே
வழிமறித்து வழிசொன்னார் ஒருமுகவர்!

ஆருயிருக்கும் காப்புறுதி
ஆபத்துக்கும் காப்புறுதி
வீட்டின் பேரிலும் காப்புறுதி
விளையும் பொருளுக்கும் காப்புறுதி
பட்டியல் பலவாறாய்ப்
போட்டுக் காட்டி
பாலிசி பலப்பல
எடுக்கச் சொன்னார்!

காப்புறுதிக்கும் காப்புறுதி
கண்டால் எனக்குச்
சொல்லிடுவீர்!

மஞ்சக் கடுதாசி
காட்டி விட்டு
மாயாவியாய்க் கம்பெனிகள்
மறைகின்றன இன்னாளில்!

வங்கியில் போட்டால்
வளரும் என்றார்
வட்டியும் குட்டி
போடு மென்றார்
வட்டி விகிதம்
கொறஞ்சு போச்சு
வாக்கில் நாணயம்
தவறிப் போச்சு!
வங்கியே பத்திரம்
என்பதெல்லாம்
மாறிப்போச்சு
என்ன செய்ய?

வீட்டிலே பெட்டகம்
வாங்கி வச்சு
பூட்டி வைக்கலாம்
பணத்தை என்றால்
பூட்டை உடைக்கும்
திருடன் வந்தால்
பூராப் பணமும்
கொள்ளை போகும்!

வாழ்க்கையைத் தொலைச்சு
பணத்தைத் தேடியது
போதுமையா!

ஓரளவு ஒழைச்சி
ஒசத்தியாய் வாழப்
பழகிகிட்டா
ஒன்னும் பெரிசாத்
தப்பு இல்ல!

மகிழ்ச்சி என்பது
பணத்தில் இல்ல!
அனுவிச்சி வாழ்ந்தா
அது தப்பு இல்ல!

'அன்பிலே முதலீடு
செய்திருந்தால்
ஆபத்திதுபோல்
வந்திடுமோ?' - என்று
எண்ணத் துணியுது
இன்று மனம்

தேவைக்கிப் போக
மீதிப்பணம்
ஏழைங்க வாழ
உதவி செஞ்சா
ஏறும் புண்ணியம்
நம் கணக்கில்
ஏறுமா இது
நம் அறிவில்?

குறிப்பு: ( சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் ஞாயிறு, 12/10/2008 வெளிவந்தது இக்கவிதை)

Labels: